Wednesday, 18 April 2012

திருநாவுக்கரசரும் அவர் காட்டிய வாழ்க்கை நெறியும்

 திருநாவுக்கரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ
 வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ்
 பெருநாமச் சீர்பரவல் உறுகின்றேன் பேருலகில்
 ஒருநாவுக் குரைசெய்ய ஒண்ணாமை யுணராதேன்.

                                                  - சேக்கிழார்

 

 திருநாவுக்கரசர் எனவும், சிவபெருமானின் திருத்தொண்டு வளர்வதற்கு காரணமான நெறியில் நின்று உலகம் வாழும் பொருட்டு வரும் ஞானத்தவ முனிவரான வாகீசர் எனவும், வாய்மை விளங்குவதற்கு ஏதுவான பெருமையுடைய திருப்பெயரின் சிறப்புகளை, இப்பேருலகின்கண் எடுத்துக் கூறுவதற்கு ஒரு நாவுக்கும் இயலாமையை உணராதவனாகிய எளியேன், போற்றத் துணிகின்றேன்.
இஃது பெரிய புராண கதாசிரியராம் சேக்கிழார் அவர்களின் திருவாக்கு. திருநாவுக்கரசர் அவர்தம் வாழ்க்கை வரலாற்றினை நாம் அறிவோம். அல்லாதவர்கள் இந்த அகப்பக்கத்திற்குச் சென்று அறிந்து கொள்ளுங்கள். www.thevaaram.org திருநாவுக்கரசர் தமிழகத்தின் சைவ சமய வளர்ச்சிக்கு உறுதுணையாய் விளங்கிய அறிஞர் பெருமான் ஆவார். ஆகவே அவரைப் பற்றிய சிந்தனையே இப்பிறவி பிணியிலிருந்து நம்மை விடுவிக்கும். இதற்கு சிறந்த சான்று அப்பூதி அடிகளார் ஆவார். 
திருநாவுக்கரசர் தமிழகத்தில் சமண சமயம் கோலோச்சிக் கொண்டிருந்த சமயத்தில் தன் வாழ்வில் ஏற்பட்ட தொடர் இழப்புகளால் நிலையாமையையே நிலைக்களனாக கொண்டிருக்கும் சமண சமயம் சார்ந்தார். சமண சமயத்தின் அனைத்து சமய நூலகளையும், வேதநூல்களையும் கற்றுத் தேர்ந்தார். சமணத் துறவியானபின் "தருமசேனர்" எனப் புதியப் பெயரோடு மதத் துறவியாயும், மடத் தலைவராயும் மாறினார். இருப்பினும் எம்பெருமானின் பெருங்கருணைத் திறத்தால் திருநாவுக்கரசர் சைவ சமயம் சார்ந்து தமிழகத்தில் சைவ சமயம் மீண்டும் தலைத்தூக்கியது.
   வாகீசர் பெருமான் எம்பெருமான் சிவப்பரம் பொருளைக் காணும் பெரும் பேற்றினைப் பெற்று தன் வாழ்வின் பேரின்பத்தை அடைந்துவிட்டதாய் தன்னுடைய பாடல்களில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
          "இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
               மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே."

           "கண்டேன் அவர் திருப்பாதம், கண்டறியாதன கண்டேன்."

      "கண்காள் காண்மின்களோ, கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை"

எம்பெருமானின் அருள் பெற்றவராயும் அவரின் திருவுருவ காட்சி கண்டவராயும் திருநாவுக்கரசர், தன் வழித்தோன்றல்களான நமக்கு அவர் பெற்ற இன்பத்தைத் தம் பாடல்கள் வழி நமக்கு விட்டுச் சென்றுள்ளார். "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பது திருமூலரின் வாக்கு. அதன்வழி தாம் பெற்ற பேரின்பமாம் திருவுருவக் காட்சியை நாமும் பெற வேண்டும் என்ற நோக்கில் தன்னுடைய பாடலில் அழகுற விவரித்துள்ளார். திருநாவுக்கரசர் பாடல்களில் அமைந்துள்ள கருத்துகளையும் அதன்வழி நாம் அறியக்கூடிய செய்திகளையும் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். 
   திருநாவுக்கரசரின் வாழ்க்கையில் தந்தையுமாய் தாயுமாய் விளங்கியவர், திலகவதி அம்மையார். திருநாவுக்கரசர் மீண்டும் சைவ சமயத்தைச் சார திலகவதியாரின் பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் அடிப்படையாய் இருந்தமையால் திருநாவுக்கரசரை நினைவு கூர்கையில் அம்மையாரையும் நினைவு கூர்வது சாலச் சிறந்து ஆகும். பெண் இனத்தின் பெருமைக்கு இமயம் ஒத்தவர் அம்மையார் என்பதைக் குறிக்கும் வகையில் "மாது புகழை வளர்க்கும் திருவாமூர்" என்று தன் திருப்புகழில் அருளியிருக்கின்றார், அருணகிரிநாதர். நம் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராம் சுந்தர மூர்த்தி சுவாமிகளை எல்லம் வல்ல பரம்பொருளாம் சிவப்பெருமான் வன்றொண்டர் எனும் நாமம் அளித்திருக்கின்றார். இதனை சேக்கிழார்,
          "மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டன் என்னும் நாமம்"
என்கிறார். ஆனால், திருநாவுக்கரசர் தன்னுடையக் கருத்தினை வெளிப்படுத்துவதில் சற்றே வன்மையான முறையைக் கையாண்டிருக்கின்றார் என்பது அடியேனுடைய கருத்து. சில பாடல்களை உற்று நோக்கினால் அதில் எவ்வித மாற்று கருத்து நிலவாது என்று அடியேன் கருதுகிறேன். 
   தற்போதைய நிலையில் நம் மக்களிடையே முறையான வழிபாட்டு முறை சென்று சேரவில்லை. விளைவு, நம் மக்கள் சிறு தெய்வங்களை முழுமுதற் கடவுளாகப் போற்றி வழிபடும் வழிபாட்டு முறையைப் பேணுகின்றனர். கற்காலத்தில், இயற்கையை வழிபடும் முறையை (Animism) பேணியதும் சிறுதெய்வ வழிபாட்டையே சேரும். இவை நம்பிக்கையின் அடிப்படையில் வளரும், தொடரும் பாரம்பரியம் என்கிறார், நாடறிந்த சமயப் பேச்சாளர் ஐயா திரு. ஆறு நாகப்பன் அவர்கள். அக்கூற்றின் அடிப்படையில் தமிழகத்தில் திருநாவுக்கரசர் வாழ்ந்த காலமான 7ஆம் நூற்றாண்டில், இந்நம்பிக்கை நிலவியிருந்தது சாத்தியமே. ஆக, இம்மூடப் பழக்கத்தை எதிர்த்து தன் பாடலில் அதனை வெளிபடுத்தியிருக்கின்றார்.
             "செத்து செத்து பிறப்பதே தேவென்று
                   பத்திச் செய்மனப்பாறைகட் கேறுமோ
              அத்தனென் றரியோடு பிரமனும்
                    துத்தியஞ் செய நின்றநற் சோதியே"

    பொருள்=> மீண்டும் செத்து செத்து பிறப்பதே தெய்வமென்று பொய்யாகக் கருதி பக்தி செய்யும் மனப்பாறை உடையவர்கட்கு இறைவன் என்று, திருமாலோடு பிரமனும் துதி செய்யநின்ற சோதி உள்ளத்திற்குப் பொருந்துமோ?
                                                                          (மூலம்: www.thevaaram.org).        

Monday, 16 April 2012

Just a Kickstart.

 Basically I created blogger account to share my religious affection and the passion I have for religion. I am a Saivite. I will update my speechs, essays about religion. Especially about 63 saints and 12 Thirumurai. Yesterday (16/04/2012) was Saint Thiranavukkarasar's gurupoosai. I was given an opportunity to present a speech on his way of living and the message he passed to the Saivites through his songs, the holy Thevaaram. My essays will be in Tamil as my presentations are mostly in Tamil. May Lord Shiva showers his blessings to all the livings. Aum Namah Sivaya.